சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2019 -இல் சங்கராபுரம் ஊராட்சி தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி இம்முடிவை ஏற்காததால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த முறை பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தேவி மாங்குடி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி பெற்றது செல்லும் என தீர்ப்பு வழங்கினர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து, பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றம் கிளையின் தீர்ப்பை உறுதிப்படுத்தி, தேவி மாங்குடியின் வெற்றி செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும், பிரியதர்ஷினி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, தேவி மாங்குடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.