ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸ்.! நேரில் சென்று விளக்கமளித்த சுசீந்திரன்.!

ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸிற்கு இயக்குனர் சுசீந்திரன் நேரில் விளக்கமளித்ததை தொடர்ந்து அதனை வனத்துறை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கரும்பு காட்டுக்குள் சிம்பு கழுத்தில் பாம்புடன் நிற்கிறார் . அதனையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.அதில் சிம்பு மரத்திலிருந்து உயிருடன் இருக்கும் பாம்பை பிடித்து பைக்குள் போடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் சிம்பு வனவிலங்கை துன்புறுத்தி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக அவரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வேளச்சேரி வனத்துறை அலுவலகத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் புகார் செய்திருந்தார்.அதன் பின்னர் ஈஸ்வரன் படத்தில் காட்டப்பட்டது நிஜ பாம்பு இல்லை என்றும்,அது கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக காட்டப்பட்டது என்றும் இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்திருந்தார் .

இந்த நிலையில் சமீபத்தில் விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியின்றி படத்தில் பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து இன்னும் 7 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.அதனுடன் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை ஷேர் செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டு படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது

இந்த நிலையில் ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் படத்தில் பயன்படுத்தியது ரப்பர் பாம்பு ,அதனை கிராபிக்ஸ் முறையில் படமாக்கியதாகவும் ,உண்மையான பாம்பு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சுசீந்திரனின் விளக்கம் வனத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் , கிராபிக்ஸ் முறையில் உண்மை பாம்பாகவே காட்சியை வடிவமைத்த படக்குழுவினரை வனத்துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment