அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது- ஈபிஎஸ்..!

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் கண்டனப் போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ; அதிமுகவை எவராலும் அசைத்து பார்க்க முடியாது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது.

அதிமுகவினரை பழிவாங்க நினைத்தால், அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். அதிமுகவினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எதனையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். ரெய்டு நடத்தினால் நாங்கள் பயந்துவிடுவோமா.. ? எங்கள் ரத்தத்தில் வீரம் ஊறியிருக்கிறது. திமுக அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் டீசல் விலையில் 10 ரூபாய் குறைக்க வேண்டும். இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான் திமுக ஆட்சி இருக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அதனை மு.க.ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும்.  அம்மா’ சிமெண்டை-தான் இப்போது விலையை ஏற்றி “வலிமை” சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள். வலிமை சிமெண்டாம், நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்டா கொடுத்தோம் ? “அம்மா” பெயர் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.