சூரப்பா விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம்..!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், விசாரணை ஆணையததிற்கு தடை விதிக்க கோரி சூரப்பா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து 2020 வரை சூரப்பா மீது எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அரியர் தேர்வு விவகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக அறிவிப்பதற்கான முயற்சியில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடுகள் காரணமாக சூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அரியர் தேர்வு விவகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி ஆகியவற்றின் காரணமாக சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர். விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன் வரும் மார்ச் 15-ஆம் தேதிக்குள் சூரப்பாவின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு  உத்தரவு பிறப்பித்து விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

அதற்குள் விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

author avatar
murugan