‘தோனியுடன் எந்த ஒரு மோதலும் இல்லை.. விரைவில் அணிக்கு திரும்புவேன்”- சுரேஷ் ரெய்னா!

தோனியுடன் தனக்கு எந்த ஒரு மோதலும் இல்லையெனவும், விரைவில் சென்னை அணிக்கு திரும்பி, ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என ரெய்னா தெரிவித்துள்ளார்.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19- ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவித்தார். இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். இந்தநிலையில், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன், ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகி இந்தியா திரும்பினார், சென்னை அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா.

இந்தநிலையில் ரெய்னா cricbuzz-க்கு அளித்த ஒரு பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் எந்த ஒரு மோதலும் இல்லையென கூறிய அவர், அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல உணருகிறேன் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தனிமையில் இருந்தாலும் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், சென்னை அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை விளையாட விரும்புகிறேன் என தெரிவித்த அவர், விரைவில் சென்னை அணிக்கு திரும்பி, ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.