செங்கல்பட்டில் காயங்களுடன் 6 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்..!-17 வயது சிறுவன் கைது..!

செங்கல்பட்டில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடல் காயங்களோடு முட்புதரில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செங்கல்பட்டில் உள்ள வெங்கம்பாக்கம் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் கோழிகறிக்கடை நடத்தி வருகிறார். கணேசன்-சாந்தி தம்பதிக்கு 2 பெண்குழந்தைகள் 1 ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது மகளான தீட்ஷிதா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தீட்ஷிதாவை அழைத்து கொண்டு இவரது தாய் கணினி மையத்திற்கு மின்கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். கட்டணம் செலுத்திவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு தீட்ஷிதாவிடம் கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார் சாந்தி.

இந்நிலையில் வீட்டுக்கு மகள் திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்த பிறகு குடும்பத்தினர் அந்த பகுதியில் தேடியுள்ளனர். மகள் கிடைக்கவில்லை என்பதால் சதுரங்கம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கணேசன். இந்த புகாரின் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அந்த பகுதியில் இருந்த முட்புதரில் காயங்களுடன் தீட்ஷிதாவின் உடலை மீட்டுள்ளனர். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த கொலை தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து தீட்ஷிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்று சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபிறகு மறியல் கைவிடப்பட்டுள்ளது.