நான் 10ஆம் வகுப்பு கூட பாஸ் ஆக மாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் – தோனி!..

நான் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறமாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் என்று இந்திய முன்னாள் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.

பள்ளி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடும்போது தோனி தனது பள்ளி கால நினைவைப் பகிர்ந்துள்ளார். என் அப்பா நான் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்றே எண்ணினார் எனக்கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி பலசாதனைகளைப் படைத்துள்ளார். முதல் டி-20 உலகக்கோப்பையை 2007 இல் இந்தியாவிற்காக வென்று கொடுத்தவர். இந்தியாவின் 50 ஓவர் உலகக்கோப்பை கனவை நிறைவேற்றியவர் என பல கோப்பைகளை இந்தியாவிற்கு வென்று கொடுத்தவர்.

தோனி, பள்ளி ஒன்றில் குழந்தைகளுடன் பேசும் போது தான் பள்ளி காலங்களில் எப்படிப்பட்ட மாணவர் என்பதைப் பகிர்ந்துள்ளார். தோனியிடம் தங்களுக்கு பிடித்த பாடம் எது எனக்கேட்டபோது, நான் பள்ளி படிக்கும் போது சராசரியாக தான் படிப்பேன். நான் 7 ஆம் வகுப்பிலிருந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு எனது வருகைப்பதிவு (அட்டெண்டன்ஸ்) குறையத்தொடங்கியது. பெரும்பாலும் நான் விளையாடச்சென்று விடுவதால் எனது வருகைப்பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது. நான் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்று என் அப்பா நினைத்தார், நல்ல வேலையாக நான் 10 ஆம் வகுப்பில் 66% மதிப்பெண்ணும், 12 ஆம் வகுப்பில் 56% மதிப்பெண்ணும் எடுத்து பாஸ் ஆகிவிட்டேன் என்று கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment