ஐபிஎல் தொடரில் தனது 200-வது போட்டியில் கால் பதிக்கவுள்ள “தல தோனி”

ஐபிஎல் தொடர்களில் 2008 முதல் விளையாடிவரும் தல தோனி, இன்று தனது 200 வது போட்டியில் கால்பதிக்கவுள்ளளார்.

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வை அறிவித்தார். இதனால் தோனியின் ஆட்டத்தை காண முடியாது என ரசிகர்கள் மனமுடைந்தனர். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவில்லை. ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சென்னை – ராஜஸ்தான் மோதல்:

இன்று சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றியும், 6 தோல்வியும் பெற்று 6 புள்ளியுடன் சரிசமமாக ஒரே நிலைமையில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றான பிளே-ஆப் வாய்ப்பில் விளையாட முடியும். அவ்வகையில் இரு அணிகலுக்கும் இது வாழ்வா?-சாவா? என்ற போர் நடைபெறவுள்ளது.

200 வது போட்டி:

இந்த போட்டி, தோனிக்கு 200 வது போட்டியாகும். ஐபிஎல் தொடர், 2008 ஆம் ஆண்டில் தொடங்கிய நிலையில், இதில் அதிக போட்டிகள் ஆடிய வீரர் என்ற பெயரை தல தோனி படைத்தார். மேலும், 200 போட்டிகள் விளையாடவுள்ள முதல் வீரராக சென்னை அணியின் கேப்டன் தல தோனி இருக்கவுள்ளார். அவரைதொடர்ந்து ரோஹித் 195 போட்டிகளிலும், ரெய்னா 193 போட்டிகள் ஆடியுள்ளார்.

2008 முதல் 2020 வரை:

அதுமட்டுமின்றி, 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடிய தல தோனி, அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். ஆனால் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணிக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது. அந்த ஆண்டுகளில் புனே அணிக்காக 30 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். மேலும் தல தோனி, ஐபிஎல் தொடரில் 4,568 ரன்கள் குவித்தார். அதில் சென்னை அணிக்காக மட்டுமே 3994 ரன்கள் குவித்துள்ளார்.

பழைய தோனி இல்லை:

9 ஆட்டத்தில் 136 ரன்கள் அடித்த தோனியின் பேட்டிங்கை பலரும் விமர்சித்து வருகின்றனர். பழைய தோனியை நடப்பாண்டில் காணமுடியவில்லை என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் வருத்ததுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவரின் 200 வது போட்டியில் அபாரமாக ஆடுவாரா? என்ற கேள்வி, ரசிகர்களிடையே எழுந்துள்ளது.