துக்க நிகழ்ச்சிக்கு செல்லும்போது நேர்ந்த துயரம்.. பைக்கில் சென்ற தாய்-மகன் உயிரிழப்பு!

கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள மார்த்தால் பகுதியை சேர்ந்தவர், மேரி சுசிலா. 43 வயதாகும் இவர், அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரின் மகன் அஜய். 17 வயதாகும் அவர், டிப்ளமோ படித்து வருகிறார்.

இந்நிலையில்,  இவர்கள் இருவரும் தடிகாரங்கோணம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை அஜய் ஓட்டிவந்தார். எட்டாமடை பகுதியை நெருங்கியதும் முன்னே சென்றுகொண்டிருந்த டெம்போவை முந்தி செல்ல அஜய் முயன்றார்.

அப்பொழுது சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தெரியப்படுத்த அதன் மேல் பிளாஸ்டிக் டப்பா வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது மோதாமல் இருக்க பைக்கை திரும்பியுள்ளார். அப்பொழுது டெம்போவின் பின் சக்கரத்தில் பைக் சிக்கி விபத்தானது.

இந்த விபத்தில் அஜய் மற்றும் மேரி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.