ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும்- மு.க.ஸ்டாலின்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், தான் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றிக்கொண்டிருப்பதாகவும், கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே நான் வேட்பாளர் என கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்கள் மறக்க முடியுமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் குருவிகளை போல சுட்டுக்கொல்லப்பட்டதை இன்று நினைத்தாலும் நெஞ்சு துடிக்கிறது, இரத்தக் கண்ணீர் வருகிறது என கூறிய ஸ்டாலின் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். பலியானோர் குடும்பத்தினருக்கு தகுதியில்லாத வேலையை கொடுத்தனர் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் பல இடங்களில் அடிக்கல் நாட்டுகின்றனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும், தேர்தல் முடிவு வெளியாகி நாங்கள் பதவியேற்றதும் ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்தநாளன்று கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.