முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார். அதனால்.., சேகர்பாபு பரபரப்பு

Election2024 : முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதன் காரணமாக தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள். – சேகர்பாபு.

இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது என பிரதமர் மோடி கூறிய விமர்சனத்திற்கு நேற்று மத்திய சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான் பிரதமர் இத்தனை முறை தமிழகம் வந்து திரும்ப சென்றுள்ளார் என கூறினார்

மேலும், சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான் அண்ணாமலை (பாஜக மாநில தலைவர்) எங்கு வேண்டுமானாலும் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிகிறது. வாய்க்கு வந்தபடி எதனை வேண்டுமானாலும் பேச முடிகிறது.  முதல்வர் எங்களை போன்றவர்களை அடக்கி வாசிக்க சொல்லி இருப்பதால் தான் அண்ணாமலை போன்றோர் எல்லாம் இவ்வாறு பேசி வருகிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.