இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சி.? பகீர் கிளப்பும் மைக்ரோஃசாப்ட்.!

Election2024 :  இந்திய தேர்தலை AI தொழில்நுட்பம் மூலம் சீனா சீர்குலைக்க நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாமான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், வாக்கு இயந்திர ஒப்புகை சீட்டையும் கணக்கில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.

இப்படியான சூழலில் தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா உட்பட உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் சீனா, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி அதில் குளறுபடி ஏற்படுத்த உள்ளது என எச்சரித்துள்ளது.

முதலில், தைவானில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீனா இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தியது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலம்  இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களை சீர்குலைக்க சீனா தயாராகி வருவதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும், ஐரோப்பிய யூனியனைத் தவிர, சுமார் 64 நாடுகளில் இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

மைக்ரோசாப்ட் புலனாய்வு குழுவின் அறிக்கைபடி, சீன அரசின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள், வட கொரியாவின் ஈடுபாட்டுடன், 2024இல் திட்டமிடப்பட்ட பல்வறு நாட்டு பொதுத்தேர்தல்களை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.   இந்த தேர்தல்களின் போது சீனாவின் நலன்களுக்கு ஆதரவாக உள்ள அரசுகளை தேர்ந்தெடுக்க முயற்சி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.