22 லட்ச ருபாய் காரை விற்று ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் “ஆக்ஸிஜன் மேன்”

மும்பையை சேர்ந்த ஷானவாஸ் என்பவர், தனது 22 லட்ச ரூபாய் மதிப்பிலான ford endeavour காரை விற்று, ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு சப்ளை செய்து வருகிறார். மக்கள் அவரை “ஆக்ஸிஜன் மேன்” என்று அழைத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவீரமாக நடைபேற்று வருகிறது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள், ரெம்டெசிவிர் மருந்திற்கு தட்டுப்பாடுகள் . அந்தவகையில், மும்பையை சேர்ந்த ஷானவாஸ் என்பவர், தனது 22 லட்ச ரூபாய் மதிப்பிலான ford endeavour காரை விற்று, ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.

ஷானவாஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பாக 22 லட்சம் மதிப்பிலான சொகுசு SUV ரக காரை வாங்கினார். கொரோனா பரவலின் இரண்டாம் அலையால் மக்கள் பலரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருவதை அறிந்த அவர், தனது காரை விற்று அப்பகுதி ஏழை மக்களுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் சேவைகளை வழங்கி வருகிறார். ஷானவாஸ், இதுவரை 160 ஆக்ஸிஜன் சிலிண்டரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தனது நண்பரின் மனைவி ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஆட்டோவிலே உயிரிழந்துள்ள காரணத்தினால், நாங்கள் ஆக்ஸிஜன் சப்ளை செய்து வருவதாக கூறினார். மேலும், இதற்காக கட்டுப்பாடு மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி வரை 50 அழைப்புகள் வந்த நிலையில், தற்பொழுது நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 அழைப்புகள் வரை வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த சேவையை பாராட்டி, மக்கள் அவரை “ஆக்ஸிஜன் மேன்” என்று அழைத்து வருகின்றனர்.