பொதுத்தேர்வு குறித்து 2, 3 நாள்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்- உதயநிதி ஸ்டாலின்.!

இன்று அமைச்சர் செங்கோட்டையனை,  திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி முதல்  ஏப்ரல் 13-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தநிலையில் மார்ச் 24-ம் தேதி  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 10-ம் வகுப்புத் தேர்வு  ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் வரைநடைபெறும்  என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 10-ம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலதரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்புத் தேர்வை ஜூன் 15-ம் தேதி முதல்  25-ம் தேதிவரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதற்க்கான புதிய தேர்வு அட்டவணையையும் அரசு வெளியிட்டது. இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையனை, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது ,  10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தினால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து  2 அல்லது 3 நாள்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும். எங்களின் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், 15 நாட்கள் தேர்வைத் தள்ளி வைக்கும் அரசின் முடிவை திமுக வரவேற்பதாக தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk