ஈஷாவில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் -குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

கோயம்புத்தூரில் உள்ள ஈஷாவில் மகாசிவராத்திரி விழா இன்று மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். 

இந்த விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும். சிவனின் அருள் நிறைந்த இரவு என்று வழங்கப்படும் மகாசிவராத்திரி இரவு நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈஷாவின் 26-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா இன்று  மாலை 6 மணி முதல் நாளை  காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. இதில் தன்னை உணர்ந்த ஞானியும், யோகியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் நேரில் பங்கேற்க உள்ளனர்.இந்நிலையில் இன்று நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.மேலும்  பல முக்கியத் தலைவர்கள் மற்றும் திரையுலக பங்கேற்கின்றனர். இதற்காக கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.