மதுரை குருவிக்காரன் தரைப்பாலம் ரூ.23.17கோடிக்கு உயர்மட்ட பாலமாக்க கட்டுமானப்பணி தொடங்கியது… இன்று முதல் போக்குவரத்துக்கு தடை…

கோவில் நகரமான மதுரையின் வைகையாற்றின் குறுக்கே உள்ள குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பணி தற்போது துவங்க உள்ளது. இதையொட்டி ஏற்கனவே அங்குள்ள பழைய தரைப்பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டது. இதனை உரிய முறையில் பராமரிக்காததால் இந்த பாலத்தின் அடித்தளம் மிகவும் பலம் இழந்து காணப்பட்டது. மேலும் வைகை ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வந்தால், இந்த  தரைமட்ட பாலம் மூழ்கி விடும்.

இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்யும்  நிலை ஏற்பட்டது.  எனவே அந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு, அங்கு புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே,  நகர் மற்றும் ஊரகத் திட்ட துறையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.23.17 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது. இந்த பாலம் 200 மீ நீளம், 17.50 மீ அகலம் மற்றும் இருபுறமும் 1.50 மீ. நடைமேடையுடன் அமைக்கப்பட உள்ளது. இங்கு கட்டுமான பணி துவங்க உள்ளதால், இன்று முதல் பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்காக பாலத்தின் மேற்கு பக்கம் தற்காலிகமாக அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்லலாம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kaliraj