“புதுச்சேரியிழும் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்!” முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்க சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும், அக்கட்டடம் பழுதடைந்தல காரணத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டில் காரைக்கால் புறவழிச் சாலையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.19.61 கோடி மதிப்பில் நீதிமன்ற வளாகத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது.

அங்கு நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி, நீதிபதிகள் குடியிருப்பு, வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம், இலவச சட்ட உதவி மையம் உள்ளிட்ட கட்டிடங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கட்டடத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்தநிலையில், இதில் கலந்துகொண்ட புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், வழக்கறிஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து வசதிகளுடன் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பதாக தெரிவித்தார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த திறமையான வழக்கறிஞர்கள் பலரும் பணியாற்றி வருவதாகவம், புதுச்சேரியில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்கவும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.