மத்தியப்பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் நேர்ந்த விபரீதம்..!-4 பேர் பலி..!-19 பேர் படுகாயம்..!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஏற்பட்ட விபரீதத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள விடிஷா மாவட்டத்தில் கஞ்ச் பசோடா என்ற பகுதியில் இரவு நேரத்தில் சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்த கிணறு 50 அடி ஆழம் உடையது. மேலும், இந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் இருந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை காப்பாற்றுவதற்கு சிலர் கிணற்றில் குதித்துள்ளனர்.

மேலும், இந்த தகவலை தெரிந்துகொண்டு இப்பகுதிக்கு படையெடுத்த கிராம மக்கள் கிணற்றின் சுவற்றில் நெருங்கி நின்று நடப்பதை பார்த்துள்ளனர். இதனால் நிற்பவர்களின் பாரம் தாங்காமல் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் நின்று கொண்டிருந்தவர்கள் கிணற்றில் விழுந்துள்ளனர்.

மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட டிராக்டரும் கிணற்றில் விழுந்துள்ளது. இதில் 4 காவல்துறையினரும் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும்,இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 19 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.