எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட அனுமதி அளித்த செபி!

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.மேலும், இதன்மூலம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் கோடி வரை நிதி திரட்டி, நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதனையடுத்து,எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5%  பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில்,அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் செபியிடம் கடந்த பிப்.மாதம் 12 ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில்,வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 22 நாட்களுக்குள் பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் பொதுப்பங்குகளை (ஐபிஓவுக்கு) வெளியிட  பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது.இதன்மூலம்,எல்ஐசி நிறுவனம் 31,62,49,885 பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.

எனினும்,உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போர் காரணமாக பங்கு சந்தைகள் நிலையற்ற தன்மையில் காணப்படுவதால்,எல்ஐசியின் பங்கு விற்பனை தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே,மார்ச் மாதத்துக்குள் எல்ஐசி ஐபிஓ நடக்காவிட்டால் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மட்டுமே கிடைக்கலாம் என்றும்,மாறாக பங்கு விற்பனை நடந்தால் அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் கோடி வரை மத்திய அரசுக்கு கிடைக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.