10 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை – உயிரிழந்த சிறுவன்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று மாலை 10 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பித்தோராகர் மாவட்ட வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளதாவது: 10 வயது சிறுவனும், அவனது தங்கையும் லாத்ரி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்துள்ளனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிறுவனின் பின்பக்கத்திலிருந்து சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்கியுள்ளது. மேலும் அந்த சிறுவனை காயத்தோடு வனத்திற்குள் இழுத்து சென்றுள்ளது. இவையனைத்தையும் பார்த்த சிறுமி பயத்தில் அழுதுக்கொண்டே கிராமத்தாரர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

உடனே கிராமத்து மக்களும் சிறுமி கூறிய இடத்திற்கு சென்று தேடியுள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு சில அடிகளுக்கு அப்பால் சிறுவனின் உடல் கிடந்துள்ளது. உடனே சிறுவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.  ஆனால், சிறுவன் சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.