கர்நாடக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள், மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல், வரும் மே 10ஆம் தேதி நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி தரப்பில், 3 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதில் இருவரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன, தற்போது கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலிலிருந்து, ஓபிஎஸ் தரப்பு தங்களது வேட்புமனுவை வாபஸ் பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதிமுக சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என இபிஎஸ் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையில் கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசிநகர் சட்டசபை தொகுதியில் அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதே தொகுதியில் ஓபிஎஸ் தரப்பிலும் அதிமுக சார்பாக நெடுஞ்செழியன் நிறுத்தப்பட்டிருந்தார், இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பிற்கு இது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பு முழுவதுமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் தங்களது வேட்புமனுவை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.