#JustNow: குரூப் 4 தேர்வு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தேர்வர்களுக்கான நடைமுறைகள் வெளியீடு!

குரூப் 4 தேர்வர்களுக்கான பின்பற்றவேண்டிய நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. அதாவது, தமிழக அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழக முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதவியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வர்களுக்கான பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 4 தேர்வு எழுத வருவோர் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். 9 மணிக்கு OMR தாள்கள் வழங்கப்படும்.

12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது. OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும், பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். OMR தாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது. விடைதெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் குறிக்க வேண்டும்.

மேலும், தேர்வு எழுத வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். செல்போன்கள் மற்றும் இதர பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனக் கூறியுள்ளது.  இதனிடையே, குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தேர்வு மையங்களில் சிறப்புப் பேருந்துகள் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment