உடலை அடக்கம் செய்ய அரசு ரூ.15 ஆயிரம்! வழங்க உத்தரவு

 கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தால் இறுதிச்சடங்கிற்கு அவரின் குடும்பத்தாருக்கு உடனடியாக ரூ.15 ஆயிரம் நிதியுதவி  அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கோரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவப் பணியாளர்கள் மோசமான முறைகளில் கையாள்கிறார்கள். மண் அள்ளும் எந்திரத்தின் மூலமாக கொண்டு சென்றும், டிராக்டரில் கொண்டு சென்றும் புதைக்கிறார்கள் என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அண்மையில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் கொரோானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று  ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் அம்மாநில துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான அலா நானி, தலைமைச் செயலாளர் நீலம் ஷானே, டிஜிபி கவுதம் சாவாங், மருத்து மற்றும் சுகாதார சிறப்புச்செயலாளர் கே.எஸ். ஜவஹர் உள்ளிட்டர் பங்கேற்றனர்.

ஆலோசனை  கூட்டத்தில் சில அதிரடியான   முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து ஆந்திர அரசு வெளியிட்ட அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆந்திராவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தால், அவரின் இறுதிச்சடங்கிற்காக குடும்பத்தாரிடம்  ரூ.15 ஆயிரத்தை ஆந்திர அரசு சார்பில் உடனடியாக நிதியுதவி வழங்கப்படும். மேலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கின்ற தனியார் மருத்துவமனைகள் மீது மிக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஏதேனும் புகார்கள் வந்தால், அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அதன் உரிமமும்  உடனடியாக ரத்து செய்யப்படும் என்று  முதல்வர் ஜெகன் மோகன் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் முகாம்களில் இருக்கும் அனைவருக்கும் சுகாதாரமான சூழல், தரமான உணவுகள், மருந்துகள், சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கால் சென்டர் ஒன்றை உருவாக்கி, அதில் கரோனா மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் இருப்பவர்களின் குறைகளைப் பதிவு செய்து அதில் எத்தனை நீக்கப்பட்டுள்ள போன்றவற்றையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு கொரோனா மருத்துவமனை மையத்திலும் கால்சென்டர் தொலைப்பேசி எண்களை மக்கள் அறியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ்காக ஆந்திர அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவருக்கு செய்யப்படும் பரிசோதனைகள், அளிக்கும் சிகிச்சைகள், மேற்கொள்ளும் பரிசோதனைகள் ஆகியவை குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

மேலும் அனைத்து பரிசோதனைகளும் மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆர் விதிமுறைப்படி செய்யப்படுகிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

ஆந்திராவில் கரோனா இறப்பு அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் கடைசி நேரத்தில் தீவிர கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதால் தான் காப்பாற்ற முடியாமல் போகிறது. தனிமைப்படுத்தும் முகாம்களில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி, பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை எல்லாம் தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும், ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தற்போது 17 ஆயிரம் மருத்துவர்கள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள் என்று மருத்து குழுவினர் முதல்வரிடம் தெரிவித்தாகவும் உடனடியாக இதற்குரிய செயல்திட்டத்தை உருவாக்கும் படி மருத்துவத்துறை செயலாளருக்கும்,  சுகாதாரத்துறை அமைச்சருக்கும் முதல்வர் உத்தரவிட்டதாக அந்த அந்த அறிவிப்பில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha