மக்களவை தேர்தல்! 50 சதவீதத்தைக் கடந்தது வாக்குப்பதிவு… எந்த தொகுதியில் அதிகம்?

Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் 39, புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

அதுமட்டுமில்லாமல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதனால் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். அதேசமயத்தில் இன்று காலை 7 மணி முதல் பதிவாகும் வாக்கு சதவீதம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் அதிகபட்சமாக தருமபுரியில் 57.86%, நாமக்கல்லில் 57.67%, கள்ளக்குறிச்சியில் 57.34%, ஆரணியில் 56.73%, கரூரில் 56.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுபோன்று, குறைந்தபட்சமாக மத்திய சென்னை 41.47%, தென் சென்னை 42.10% மற்றும் வட சென்னையில் 44.84% வாக்குகள் பதிவாகியுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 58.86% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 45.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்