டோக்கியோ ஒலிம்பிக்: கொரோனா பாதித்த மற்றொரு அமெரிக்க வீராங்கனை..!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் என வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதன்காரணமாக,அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி முகாமில் அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ் என்று வந்துள்ளதாக கியோடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,சிபா ப்ரிஃபெக்சர் இன்சாய் நகரத்தால் கொரோனா பாதிக்கப்பட்ட டீனேஜ் விளையாட்டு வீரரின் பெயர் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில்,ஐரோப்பாவின் செக் குடியரசு கைப்பந்து வீரருக்கு கொரோனா உறுதி செய்ததாக செய்தி வந்த நிலையில்,தற்போது அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்,இந்த வளாகத்தில் இருந்த இரண்டு தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர்கள் மற்றும் ஒரு ஆய்வாளர் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதேப் போன்று,அமெரிக்காவை சேர்ந்த 17 வயது டென்னிஸ் வீராங்கனை கோகோ காப்க்கு,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், இதன்காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.