கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அளவு குறைக்கப்படுகிறதா?

கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலம் தற்போது 84 நாட்களாக உள்ளது.

ஆனால், இந்த தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தபோது இதன் இடைப்பட்ட கால அளவு 4 முதல் 6 வாரங்களாக இருந்தது. பின்னர் இந்த இடைவெளி 6 முதல் 8 வாரங்களாக மாற்றப்பட்டது. இதனை அடுத்து இந்த இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக மாற்றப்பட்டது. இப்படி தடுப்பூசியின் கால அளவை மாற்றுவது குறித்து மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தது.

இதில் முக்கியமாக தடுப்பூசி பற்றாக்குறையே என்று பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதன் கால அளவு மாற்றப்படுவது குறித்து பரிசீலினை செய்யப்படவுள்ளது. நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு இது குறித்து முடிவெடுப்பார்கள். மேலும் அரசு வட்டாரங்கள் இந்த தடுப்பூசியின் இடைவெளிக்காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்து வருகிறது.