இந்தியா-இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 373/7 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கவுகாத்தியில் இன்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் குவித்தபோது, கில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவும் 83 ரன்கள் எடுத்தநிலையில் போல்டானார். ஒருபுறம் விராட் கோலி நிலைத்து நின்று ஆடி தனது அரைசதத்தை நிறைவுசெய்தார்.
மறுபுறம் ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுக்கும், கேஎல் ராகுல் 39 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதன்பிறகு வந்த ஹர்டிக் பாண்டியா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி தனது 45-வது சதத்தை அடித்தார். இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக 9 சதங்கள் அடித்து சச்சினின்(8 சதங்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.
கோலி 113 ரன்கள் எடுத்த நிலையில் ரஜிதா பந்தில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.