இந்தியாவுக்கு மற்றொரு பெருமை….உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிரியா மாலிக்…!

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமான நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியதில் இருந்து,பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.

வெள்ளிப் பதக்கம்:

அதன்படி,நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.இது, ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெள்ளிப்பதக்கம் ஆகும்.மேலும்,தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.இதன்மூலம்,மீராபாய் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்தார்.

பிரியா மாலிக் சாதனை:

இந்நிலையில்,ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் ,பெலாரஸ் நாட்டின் க்சேனியா படபோவிச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று,மல்யுத்தத்தில் தனது பலத்தை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.

இதனால்,பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்து:

அந்த வகையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,”73 கிலோ உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற பிரியா மாலிக்கிற்கு எனது வாழ்த்துக்கள்.என் இதயம் முழுவதும் இந்த பெருமையால் நிறைந்துள்ளது.

நம் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து பிரகாசிப்பீர்கள்”,என்று ட்வீட் செய்துள்ளார்.

தங்கப் பெண்:

பிரியா மாலிக் ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சவுத்ரி பாரத் சிங் நினைவு விளையாட்டுப் பள்ளி நிதானி (சிபிஎஸ்எம் விளையாட்டுப் பள்ளி நிதானி) மாணவி. பிரியாவின் தந்தை ஜெய் பகவான் நிதானி இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்றது புதிய சாதனையல்ல, ஏனெனில் அவர் தொடர்ந்து தங்கத்தை அடித்து வருகிறார்.2019 ஆம் ஆண்டு புனேவில் நடந்த  மல்யுத்த போட்டியில் பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதனால்,பிரியா மாலிக் வெற்றியில்,அவரது பயிற்சியாளர் அன்ஷு மாலிக்குக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் உண்டு.2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பிரியா தங்கம் வென்றார். இது தவிர, கடந்த ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற தேசிய கேடட் மல்யுத்த போட்டியிலும் தங்கப்பதக்கத்தையும் வென்று  “தங்கப் பெண்ணாக” உள்ளார் எனினும்,ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதே பிரியா மாலிக்கின் கனவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.