செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.! கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவிற்கு முதல்வர் வாழ்த்து.!

 சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கான ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட பிரக்யானந்தா அரையிறுதி போட்டியில் கலந்து கொள்வதை அடுத்து அவருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 22ம் தேதி முதல் சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கான ஆன்லைன் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 20வயதுக்கு உட்பட்டோருக்கான Pool ‘A’ பிரிவில் சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (15) மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் இந்தியா சார்பாக கலந்து கொண்டனர். அதில் சீனாவை சேர்ந்த லியூயானை 4ட்ரா மற்றும் 2 வெற்றி என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் இந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்ளவிருக்கும் பிரக்யானந்தாவிற்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை பிரக்யானந்தாவிற்கு தெரிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த சிறுவன் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா அவர்கள் இறுதி சுற்றிலும் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித்தர எனது அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்