காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பினராயி விஜயன் அரசு வெற்றி.!

கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் தீர்மானம் தோல்வியடைந்தது.

கொரோனா வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும் என பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில், திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை மத்திய அரசு பரிசீலினை செய்ய வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்திருந்தார். அதானி குழுமம் வழங்கும் தொகையை மாநில அரசே வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையிலும், தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, அரசின் தீர்மானத்தை ஆதரித்த போதும், கேரள அரசு அதானி குழுமத்துக்கு மறைமுகமாக உதவுவதாக குற்றம்சாட்டினார். பின்னர் தனியாருக்கு வழங்குவதை கண்டிக்கும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவையில், தங்கக்கடத்தல் விவகாரத்தை எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன், மாநில அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தார். ஐடி துறைக்கு பொறுப்பாக இருக்கும் முதல்வர், முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷின் பணி குறித்து தனக்கு தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை என்றார். தங்கக்கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால், ஆளும் கட்சி மாற்று காங்கிரஸ் உறுப்பினர்ளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. எனவே, ஆளும் கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை உள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் தீர்மானம் தோல்வியடைந்து, பிரனாயி விஜயன் அரசு வெற்றி பெற்றது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்