வரலாற்றில் இன்று(டிசம்பர் 06) -பாபர் மசூதி இடிப்பு தினம்..!

அயோத்தி நகரம் இராமர் பிறந்த இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.1528-ம் ஆண்டு முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது.

அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் , இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன. பாரதிய ஜனதா கட்சி 1989 தேர்தலின் போது அயோத்தி பிரச்சனை தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது.

செப்டம்பர் 1990-ல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரத யாத்திரை தொடங்கினார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.1992 டிசம்பர் முதல் வாரத்தில் நாடெங்கிலிருந்தும் கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர்.

அவர்களால் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அத்வானி, ஜோஷி, விஜய் ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை மசூதி மேலிருந்து கீழே இறங்கும்படி சுரத்தற்ற வேண்டுகோள்கள் விடுத்தனர் என சொல்கிறது. நல்லெண்ணத்துடன் இதைச் செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண் துடைப்புக்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை.

மசூதியின் இடிப்பு நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பல மாதங்களாக இந்துக்களுக்கும் , இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும்  வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது.

இக்கலவரம் மும்பை, சூரத், அகமதாபாத், டெல்லி போன்ற பல நகரங்களில் பரவி கிட்டத்தட்ட 1,500 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் இந்த அயோத்தியில் உள்ள நிலம் யாருக்கு என பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

சமரச குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கு தொடர்ந்து 40 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது.

மேலும் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும்.  என்று மத்திய அரசுக்கும் , உத்தரபிரதேச மாநில அரசுக்கும்  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த முடிக்கு இஸ்லாமியர்களும் ,இந்துக்களும் பலர் ஆதரவு தெரிவித்தனர்.இதை தொடர்ந்து நீண்ட நாள்களாக பிரச்சனையில் இருந்த அயோத்தி வழக்கு கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது.

 

author avatar
murugan