ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள்.. தொல்லியல் துறையின் முக்கிய தகவல்கள்….

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், அதன் அருகே ஞானவாபி மசூதியும் உள்ளது. இந்த ஞானவாபி மசூதியானது இந்து கோயில் இருந்த இடம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஞானவாபி மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அந்த சிலைக்கு பூஜை செய்ய மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், முதலில் வீடியோ வாயிலாக ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அங்கு சிவலிங்கம் போன்ற அமைப்பு இருப்பதை கண்டறிந்து மாவட்ட நீதிமன்றத்தில் கூறினர்.

டெல்லியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை.!

ஆனால், அது சிவலிங்கம் இல்லை, அது நீரூற்று என்றும் மசூதி தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து , கடந்த 2023 டிசம்பர் மாதம், வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி பற்றி ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று  தொல்லியல் துறை ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாரணாசி நீதிமன்றம், மாவட்ட நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ் தலைமையிலான அமர்வு, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலுள்ள ஞானவாபி மசூதி வளாகம் குறித்த தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை சம்பந்தப்பட்ட இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளுக்கு தெரிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்து இருந்தது.

அதில், ஞானவாபி மசூதி வளாகத்தில் தற்போதைய கட்டுமானத்திற்கு முன்னர் அந்த இடத்தில் இந்து கோவில் இருப்பதை ஆய்வு அறிக்கை  உறுதிப்படுத்துகிறது. ஞானவாபி ஆய்வு அறிக்கையின் படி, 17 ஆம் நூற்றாண்டில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டமைப்பு அகற்றப்பட்டு அதன் ஒரு பகுதி மாற்றப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்றும், தற்போதுள்ள கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு இந்த இடத்தில் ஒரு பெரிய இந்து கோவில் இருந்தது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

மசூதியில் ஒரு அறைக்குள் கண்டெடுக்கப்பட்ட அரேபிய-பாரசீக கல்வெட்டில் மசூதி மொகலாய மன்னர் அவுரங்கசீப்பின் ஆட்சி காலத்தில்  17 ஆம் நூற்றாண்டில், அந்த பகுதியில் ​​ஏற்கனவே இருந்த இந்து கோயில் கட்டமைப்பை அழித்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய மசூதி கட்டமைப்பின் மேற்கு சுவரானது, முன்னதாக இருக்கும் இந்து கோவிலின் மீதமுள்ள பகுதியை குறிக்கிறது. மசூதியின் விரிவாக்கத்திற்கு முன்பு இருந்த கோவிலின் தூண்கள் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பகுதியில், இருக்கும் இடத்தை விரிவுபடுத்துவதற்காக மசூதியில் ஒரு பாதாள அறைகள் கட்டப்பட்டன அதனுடன் மசூதிக்கு முன்னால் ஒரு பெரிய கூட்டம் தொழுகைக்கு இடமளிக்கும் வகையில் ஒரு மேடை உருவாக்கபட்டுள்ளது. மேடையின் கிழக்குப் பகுதியில் பாதாள அறைகள் கட்டும் பணியின் போது, ​அதில் , ​முந்தைய காலத்து கோயில் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போதைய தொல்லியல் ஆய்வின் போது மொத்தம் 34 கல்வெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 32  கடவெட்டுகள் அங்கு முன்பிருந்த இந்து கோவில்களின் கல்வெட்டுகளாகும். அவை மசூதி கட்டுமான பணிகளின் போது மீண்டும் பயன்படுத்தப்பட்டன. அந்த கல்வெட்டுகளில் தேவநாகரி, கிரந்த, தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துக்களில் உள்ளதும் தொல்லியல் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.