செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ‘இன்ஜெனியூட்டி ஹெலிஹாப்டர்’…!மனித வரலாற்றின் மிகப்பெரிய சாதனை..!

மனித வரலாற்றிலேயே முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனைப் படைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? அல்லது மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மனித குலத்தின் மிகப்பெரிய கனவாக இருந்தது.

இந்த நிலையில்,கடந்த  ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலம் 7 மாதங்களில் 292 மில்லியன் கிலோமீட்டர் பயணித்து பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசொரா பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இந்த முயற்சியில் ஈடுபட்ட பெர்சிவெரென்ஸ் வழிநடத்துக் குழுவின் தலைவராக பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகனுக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்தன.

தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு பெர்சிவெரென்ஸ் ரோவர் எடுத்த செவ்வாயின் புகைப்படங்களை வெளியிட்டது நாசா. மேலும், பெர்சிவெரென்ஸ் இரண்டு ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகள்,மணற்பாங்கான இடங்களில் துளையிட்டு அதனை சேகரித்துகொண்டு,2030 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.ஆனால்,இந்த முயற்சி கடந்த வாரம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது.அதன் பிறகு அக்கோளாறு சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில்,ரோவருடன் இணைத்து அனுப்பப்பட்ட ‘இன்ஜெனியூட்டி’ என்ற 1.8 கிலோ எடை கொண்ட சிறிய அளவிலான அதிநவீன ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க விடும் முயற்சியில் தற்போது நாசா ஈடுபட்டுள்ளது. அதன்படி,தற்போது செவ்வாய் கிரகத்தில் 30 வினாடிகள் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்கவிட்டது.இதன்மூலம், பூமியை தவிர வேறொரு கிரகத்தில் முதன் முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.