நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் பெய்த மழையால் 868 பேர் உயிரிழப்பு.!

நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 868 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல இடங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. மேலும், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள சில பகுதிகளில் ஜூலை மாதத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதனையடுத்து கர்நாடகா மும்பை, கொங்கன் மற்றும் ராஜஸ்தானில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்  சூழல் ஏற்பட்டது. மேலும் பரவலாக பெய்து வரும் மழையால் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்தும் வருகிறது. மேலும் கேரளாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 58 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 868 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு வழக்கத்துக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. கடந்தாண்டு மழைப்பொழிவால் உண்டான வெள்ளத்தில் சுமார் 908பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகஸ்ட் 19 அன்று உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வருகின்ற தினங்களில் அதிக மழை பெய்ய கூடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானியான ஆர்கே ஜெனமணி தெரிவித்துள்ளார்.