மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறும். 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், இரவு வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கியது. இந்த கட்டடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தமீட்பு படையினர், 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.