வெறுப்பு பேச்சுக்கள் விவகாரம் : பேஸ்புக் அதிகாரிகள் இன்று நேரில் ஆஜர்.!

வெறுப்பு பேச்சுக்கள் விவகாரமாக தொடர்பாக பேஸ்புக் அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராக உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக டெல்லி அரசியலில் பேஸ்புக்கின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது. பேஸ்புக் நிறுவனத்தை பாஜக கட்டுப்படுத்துவதாகவும், பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் கொள்கை அதிகாரி அங்கி தாஸ் பாஜகவின் வெறுப்பு பேச்சுக்களை கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் பத்திரிகை செய்தி ஒன்றை வைத்துக்கொண்டு காங்கிரஸ் புகார் எழுப்பியது. இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற ஐ.டி. நிலைக்குழு, பேஸ்புக் அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.

அதாவது, இந்துத்துவ அமைப்புகளின் நிர்வாகிகள் வெளியிடும் அவதூறு கருத்துகளை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என அமெரிக்காவின் Wall Street Journal என்ற பத்திரிகையில் செய்தி வெளியானது. பின்னர் இதுகுறித்து பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் ஒன்றை அனுப்பியது. இதையடுத்து, பேஸ்புக் அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராக உள்ளனர். இதனிடையே, பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ள அவர், பேஸ்புக் இந்தியா நிர்வாகத்தில் அரசியல் சார்புடன் இயங்குபவர்களின் ஆதிக்கம் இதன் மூலம் தெரிகிறது. எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் ஊழியர்களுக்கு விருப்பு, வெறுப்புகள் இருக்கும். ஆனால், அவை பொது கொள்கைகளிலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடாது. பிரதமரையும், மூத்த அமைச்சர்களையும் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே பேஸ்புக் ஊழியர்கள் களங்கப்படுத்துவதாகவும், சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவர்களது செயல்பாடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்