டி20 தொடருக்கு யார் கேப்டன்..? காயத்திலிருந்து மீளாத ஹர்திக், சூர்யகுமார்..!

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பீல்டிங் செய்யும்போது சூர்யகுமார் யாதவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த போட்டியில் கேப்டனாக ஜடேஜா தொடர்ந்தார். இந்திய திரும்பிப் பிறகு சூரியகுமார் யாதவ் கணுக்கால் ஸ்கேன் செய்யப்பட்ட போது அது கிரேடு-2 லெவல் எலும்பு முறிவு என தெரிவிக்கப்பட்டது.  இதனால் குறைந்த பட்சம் 7 வாரங்களாவது சூர்யகுமார் யாதவ் ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இந்திய அணி ஜனவரி 11 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுடன் விளையாட உள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் தொடரை இழக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிசிசிஐ இன்னும் இந்திய அணியை அறிவிக்கவில்லை.

கேப்டன் பொறுப்பை ஏற்ற சூர்யாகுமார்:

நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பையின் போது ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில்  தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா அணி  4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடர் டி20 தொடரில் 1-1 என சமனில் முடிந்தது.

யார் கேப்டன்: 

உலகக்கோப்பையின் போது ஏற்பட்ட கணுக்காலில் காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இன்னும் களத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவர் எப்போது திரும்ப அணிக்கு வருவார்  என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, தற்போது சூரியகுமார் யாதவ் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார்.  இது போன்ற சூழ்நிலையில் பிசிசிஐ ஆப்கானிஸ்தான் தொடருக்கு புதிய கேப்டனை  தேட வேண்டும் அல்லது டி20 கேப்டன் ரோஹித் சர்மாவை  நாட வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

author avatar
murugan