ஹத்ராஸ் வன்கொடுமை: காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ்!

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அந்த பெண்ணை தாக்கியத்தில் அந்த பெண்ணின் முதுகெலும்பு உடைந்தது.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

மேலும், வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்திய குற்றவியல் சட்டப்படி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் குறித்த அடையாளங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் புகைப்படத்தை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தற்கு தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட அந்த ட்விட்டர் பதிவை உடனடியாக நீக்குமாறும் அவர்களுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.