அரசுக்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் குறைப்பு – அமைச்சர்

ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை.

கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. அரசுக்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. குரங்கம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இதனைதொடரந்து பேசிய அமைச்சர், ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதாவது, வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவராக பணிபுரிய ரூ.30,000 காட்டினால் போதும். தமிழ்நாட்டில் மருத்துவ பணி செய்ய எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.3.2 லட்சம் கட்ட வேண்டியிருந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது.

மாணவர்கள் கோரிக்கையை அடுத்து தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கட்ட வேண்டிய ரூ.2 லட்சம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார். எனவே, வெளிநாட்டில் படித்தவர்கள் பயிற்சி மருத்துவராக சேர 3.2 லட்சம் கட்டும் நிலைமை மாறி ரூ.30,000 ஆக முதலமைச்சரால் குறைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்கள் 1881 பேர், அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக பணிபுரிய ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினார். அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கான இடங்களில் 7.5% மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வெளிநாட்டில் படித்தவர்கள் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி பெற பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்த போதிய தேசிய மருத்துவ கவுசிலுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், உக்ரைன் மாணவர்கள் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்ற உத்தரவிற்காக நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment