புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தியுள்ளது – ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தியுள்ளது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தமிழில் உரையாற்றி வருகிறார்.  இக்கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றிய பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய தமிழிசை அவர்கள், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்ட நிலையில், தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. எனவே கொரோனாவை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருக்குறளுடன் தனது உரையை தொடங்கிய தமிழிசை அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நிலையில், 250 காய்கறி விதைப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 11 டிராக்டர்கள், 9 பவர் டிரில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், புதுச்சேரியில் 2020-21-ல் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்த்த நிலையில் ரூ.8,419 கோடி வந்துள்ளது. மாடித்தோட்டத்தை ஊக்குவிக்க ரூ.3,000 மதிப்புள்ள விதைகள் அடங்கிய பைகள் 75% மானியத்தில் வழங்கப்படும். வருவாயை பெருக்கும் வகையில் புதுச்சேரி பட்ஜெட் இருக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். புதுச்சேரியில் இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.