மக்கள் நலப்பணியாளர்களுக்கு நற்செய்தி.. ஊரக வளர்ச்சித் துறை போட்ட அதிரடி உத்தரவு!

மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த உத்தரவு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைதொடர்த்து, கடந்த ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் ரூ.7,500 ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மக்கள் நலப் பணியாளர்களை ரூ.7,500 ஊதியத்துடன் காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்த தமிழக அரசு புதிய கொள்கை முடிவை முன்மொழிந்தது. இதனை எதிர்த்து, மக்கள் நலப் பணியாளர்கள் சிலர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் புதிய முடிவுக்கு தடையில்லை என்றும் அரசின் புதிய முடிவிற்கு உடன்படும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மக்கள் நலப்பணியாளர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் புதிய முடிவு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் கணக்காளர், சமுதாய வல்லுநர்கள் / சமுதாய வளப் பயிற்றுனர்கள் மற்றும் பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்கள் இவர்களில் முன்னுரிமை மற்றும் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக தலைப்பிலிருந்து ரூ.5000/- ஐ மாதம் ஒன்றுக்கு வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் பல அத்தியாவசிய பணிகளையும், திட்டப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளை செவ்வனே செய்யுமளவு போதிய அலுவலர்கள் கிராம ஊராட்சிகளில் இல்லாமல் உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகத்தினை வலுப்படுத்தும் விதமாக பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்களாயிருந்து தற்போது வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளவர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி கிராம ஊராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் விதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment