விவசாயிகளுக்கு நற்செய்தி! மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

மேட்டூர் அணையில் குருவை பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, மேட்டூர் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன்பின் இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைதொடர்ந்து, இன்று மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில், டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேட்டூர் அணை திறக்கப்படுவதால் இந்த முறை முப்போகம் சாகுபடி செய்யமுடியும். 3.25 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்தால் சுமார் 5.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் வரவாய்ப்புள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பாசன வாய்க் கால்களை விரைவாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் 50 நாட்கள் பாசனத்திற்கு திறந்துவிட போதுமானது என்றும் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் இருப்பதால் அணை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்