கதிகலங்கும் காசா.! பல்வேறு விதமான வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா.!

Isreal : இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவி செய்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம், ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அதில் பெரும்பாலும் காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

போரை நிறுத்த சொல்லி பல்வேறு நாடுகள் கூறியும், அதனை இஸ்ரேல் பிரதமர் ஏற்க மறுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் வரையில் தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக கூறி வருகிறார். இஸ்ரேலுக்கு முன்னர் இருந்தே ஆயுதங்களை அளித்து உதவி வரும் அமெரிக்காவும் காசா நகர் மீதான தாக்குதலை தற்காலிமாகவாவது நிறுத்த கோரி வலியுறுத்தி வருகிறது.

போர் நிறுத்தம் பற்றி அமெரிக்கா கருத்து கூறி வந்தாலும், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பி தாக்குதலுக்கும் உதவி வருகிறது அமெரிக்கா. அண்மையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு,  பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெடிகுண்டுகள் மற்றும் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஆயுத பரிமாற்றத்தில்,  1,800 MK84 2,000-பவுண்டு வெடிகுண்டுகள் மற்றும் 500 MK82 500-பவுண்டு வெடிகுண்டுகள் மற்றும் 25 F-35 ஆகிய ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும்  ஆண்டுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

காசா நகரில் தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தொடர்ந்து உதவி வருவது, ஆளும் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடமே எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்துமாறும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.