இந்த மாவட்டங்களில் ஜூலை-5 வரை முழுபொதுமுடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாத இறுதி முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, தற்பொழுது சில தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு, நாளை முதல் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில்  ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டம் மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அங்கு முழு ஊரடங்கு  இன்று இரவு வரை அமலில் உள்ளது.

சென்னை காவல்துறைக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் மதுரை மாவட்டத்தில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளான மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு எனவும், அதன்பின் எப்போதும் போல தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து, தமிழக முழுவதும் எவ்வித தளர்வுமின்றி, வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் (05.07.2020, 12.07.2020, 19.07.2020, 26.07.2020) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிக்கை வெளியிட்டது.