பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணம்.. இன்று முதல் அமல்!

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை  கைப்பற்றிய நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அதுவும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது.

தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில், தெலுங்கானாவில் யார் புதிய முதல்வர் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்று கொண்டனர்.

இதன்பிறகு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உத்தம் குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, கோமாட்டிரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு, பொங்குலேடி சீனிவாச ரெட்டி, பொன்னம் பிரபாகர், சுரேகா கோண்டா, அனசுயா சீதக்கா, தும்மல நாகேஸ்வர ராவ, ஜூபல்லி கிருஷ்ணராவ் ஆகியோர் பதவியேற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் எம்பி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.200 கோடி பணம்.? பிரதமர் மோடியின் உத்தரவாதம்.!

இந்த நிலையில், தெலுங்கானாவில் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே தேர்தலில் வாக்குறுதியான இலவச பேருந்து பயண திட்டத்துக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார்.

அதன்படி, தெலங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணம் வழங்கும் ‘மஹாலட்சுமி திட்டம்’ இன்று முதல் அமலாகும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ‘ஜீரோ டிக்கெட்’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்