இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை… நன்றி தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்.!

Maldives : இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை குறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி லட்சதீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சுற்றுலா செல்ல விரும்புவோர் இந்திய தீவான லட்சத்தீவுக்கு வாருங்கள் என பதிவிட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு மாலத்தீவு அமைச்சர்கள், இந்தியா எவ்வளவு முயற்சி செய்தாலும் மாலத்தீவு அளவுக்கு சுற்றுலா தரத்தை அளிக்க முடியாது என பதிவிடும் வகையில் கருத்து கூறியிருந்தனர்.

இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் இப்படியான கருத்துக்கள் பேசுபொருளாக மாறியது. பல்வேறு பிரபலங்கள் இனி மாலத்தீவு செல்லப்போவதில்லை. லட்சத்தீவுக்கு செல்வோம் என்று அப்போது கூறினர். அதே போல லட்சத்தீவில் சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு முதலீடுகளும் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே உரசல் தொடர்ந்து கொண்டு இருந்தன. இதற்கிடையில் மாலத்தீவு அரசு அமைச்சர்களின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருந்தது.

பல மாதங்கள் கழித்து, தற்போது இரு நாட்டு அமைச்சர்கள் இரு நாட்டின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் பதிவிடுகையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு நாங்கள் மனதார நன்றி கூறுகிறோம். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை மாலத்தீவுகளில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு நன்றி என்றும்,

இந்தியாவின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே இரு நாட்டிற்கும் இடையேயான நீண்டகால நட்பைக் மேம்படுத்தும் ஓர் நல்ல முயற்சியாகும் என்றும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் சமுக வலைதள பக்க்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கூறுகையில், அண்டை நாடுகளுடனான வெளியுறவு கொள்கைகளுக்கு இந்தியா என்றும் உறுதியாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.