சிவசங்கரனிடம் சுங்கத்துறையை தொடர்ந்து.. என்.ஐ.ஏ அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை.!

கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியான சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுடன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், போலி சான்றிதழ் மூலம் கேரள அரசு ஐ.டி துறையில் சுவப்னா சுரேஷுக்கு உயர் பதவி கிடைக்க உதவியதாக கூறப்படுகிறது.

இதனால், பல ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு  (என்.ஐ.ஏ )அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிவசங்கரனிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று மீண்டும் கொச்சியில் என்ஐஏ விசாரணைக்காக சிவசங்கர் ஆஜரான நிலையில், சிவசங்கரனிடம் 9 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, என்.ஐ.ஏ  அலுவலகத்தில் இருந்து  தனது காரில்  சிவசங்கரன் புறப்பட்டுச் சென்றார். இன்றும் சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த உள்ளது. இதற்கு முன் சுங்கத்துறையினர் தொடர்ச்சியாக 10 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan