இங்கிலாந்தின் யூரோ கால்பந்து வெற்றி;அழுத ஜெர்மன் பெண் குழந்தை – 27,500 யூரோ நிதி திரட்டும் ரசிகர்கள்…!

யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு பின்னர்,அழுத ஜெர்மன் பெண் குழந்தைக்காக 27,500 யூரோவை நிதியாக திரட்டும் கால்பந்து ரசிகர்கள்.

முதல் முறையாக யூரோ கோப்பை கால்பந்து போட்டியானது ஐரோப்பாவின் 11 நகரங்களில் நடைபெறுகிறது.உலகம் முழுவதும் பரவிய கொரோனா அலை தாக்கம் காரணமாக போட்டியானது 2021-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்,ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில்,செவ்வாயன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிக் கொண்டன.அதில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்தது.தனது அணி தோல்வியுற்றதால் ஒரு ஜெர்மன் பெண் குழந்தை அழுதபடியே தனது தந்தையை பிடித்துக் கொண்டார்.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.பின்னர்,அந்த குழந்தை குறித்து இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டனர். மேலும்,ட்விட்டர் பயனர்கள் ஜெர்மன் பெண்ணைப் பற்றிய கருத்துக்களை “அருவருப்பானவை” மற்றும் “ஆபாசமானவவை” என்று விவரித்தனர்.

எனினும்,அந்த குழந்தைக்கு ஆதரவாக சிலர் கருத்துகளை பதிவிட்டனர்.அந்த வகையில் ஒருவர்,”ஒரு பெற்றோராக, அழுகிற இளம் ஜெர்மன் பெண்ணை இலக்காகக் கொண்டு தவறான கருத்துகளை பதிவிட்டவர்கள் ஒரு கட்டத்தில் தாங்கள் செய்த காரியத்திற்கு வெட்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்”,என்று கூறியுள்ளார்.

மேலும்,சில கால்பந்து ரசிகர்கள்,சமூக ஊடக கருத்துகளால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த குழந்தைக்காக 27,500 யூரோக்களை நிதியாக திரட்ட முடிவு செய்தனர்.அதன்படி,நேற்று வரை,8,000 யூரோக்கள் திரட்டியுள்ளனர்.