கோவில் கட்டினால் ஓட்டு போடுவார்களா? ராமர் கோவில் குறித்து மெளனம் கலைத்த எடப்பாடி பழனிச்சாமி

கோவில் கட்டினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா என்று ராமர் கோவில் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது இவ்வாறு கூறினார்.

அப்போது, “ திமுகவின் இளைஞரணி மாநாட்டில் ஒரு தீர்மானம் கூட மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை; நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் வாக்குறுதி நாடகம். வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சரியான கூட்டணியை அமைக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.

கோவில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இருந்தபோது ஏராளமான கோவில்களை கட்டி குடமுழுக்கு நடத்தினேன். அதனடிப்படையில் பார்த்தால் எனக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். கோவில் கட்டினால் எல்லோரும் மோடி பக்கமே சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து.

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த பிரேமலதா

இந்துக்கள் ராமர் கோவில் கட்டுகின்றனர், இஸ்லாமியர்கள் மசூதி கட்டுகின்றனர், கிறிஸ்துவர்கள் தேவாலயம் கட்டுகிறார்கள், அவரவர் மதம் அவரவருக்கு புனிதமானது” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.