ஈரோடு நகரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முயற்சி செய்வேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையடுத்து, வரும் பிப்.27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, பிரதான கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடு நிகழ்ச்சியில் ஈடுப்டுள்ளனர்.
அந்த வகையில், பிரதான கட்சியின் முதல் வேட்பாளராக திமுக கூட்டணி சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள், ஈரோடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம். ஈரோடு நகரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முயற்சி செய்வேன் என தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில்,இதுகுறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.